சனி, 3 ஆகஸ்ட், 2019

ஆதி திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாதர்

ஆதி திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாதர்












சுவாமி : ரங்கநாத பெருமாள்.

அம்பாள் : ரங்கவள்ளி தாயார்.

தீர்த்தம் : சந்திரபுஷ்கரணி , தென் பெண்ணைநதி.

தலவிருட்சம் : புன்னாக மரம்.

விமானம் : சந்தோமய விமானம்.

திருக்கோவிலுரிலிருந்து திருவண்ணாமலை போகும் வழியில் மணலூர்பேட்டையில் இடது பக்கம் திரும்பி 11 கிமீ போனால் கோவில். கோவிலுக்கு வயது 1000 வருடங்களுக்கு குறையாமல் இருக்கும் என்பது கோவில் மதில் சுவரை பார்த்தாலே புரிந்து போகும். சில ஆர்வக் கோளாறுகள், 75000 வருடங்கள் என்று பதிந்துள்ளன. அதில் என்ன பெருமையோ?
நிற்க, இந்தக் கோவில் திருச்சி ஸ்ரீ ரங்கம் கோவிலை விட பழையது. ரெங்கநாதரும் அதைவிட பெரிது.  நிம்மதியாக, திருப்தியாக சன்னதிக்கு அருகில் நின்று தரிசனம் செய்த சம்பவம் இன்னமும் உடல் சிலிர்க்க வைக்குது. ஜருகண்டி, ஜருகண்டின்னு தமிழிலில் சொல்லி தள்ளி விட ஆள் இல்லை. கோவில் சிறப்பு தெரிந்த உள்ளூர் மற்றும் சுற்று வட்டார மக்கள் மட்டுமே வருகை தருகிறார்கள்.

 ஆதிஷேஷன் தலைமாட்டிலும், லெக்‌ஷ்மியின் மடியில் தலை வைத்து, காலடியில் பூமா தேவியும்.... அருமையான காட்சி. இவ்வளவு தெளிவாக பள்ளிக் கொண்ட காட்சியை பார்த்தது இதுதான் முதல் முறை.

(நாங்கள் ஸ்ரீரங்கத்திலேயே பார்த்திருக்கோம் என்பவர்கள் கொஞ்சம் தள்ளியே நிற்கவும். கலர் நன்றாக தெரிகிறது. நான் என்னைப் போல சாதாரன மனிதர்களை சொல்லியிருக்கிறேன்)

ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதப் பெருமாளே நாட்டில் பெரிய பெருமாள் சிலை என நாம் எண்ணிவிடுகிறோம். ஆனால், அது உண்மையில்லை. தமிழகத்திலேயே மிக மிகப் பெரிய பெருமாளின் சிலை ஆதிதிருவங்கத்தில் தான் உள்ளது.

திராவிட கட்டிடக் கலையின் மூலம் இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படும் இத்தலத்தின் ஒரு பகுதியாக விஜயநகர அரசாங்கம் மூலம் ஐந்து ஏக்கர் பரப்பளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க தானிய சேமிப்பு கொள்கலனும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

திவ்ய தேசம் 108 கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.  இவைகள்  அனைத்தையும் விட சிறப்பானது மற்றும் பழமையானது ஆதி திருவரங்கம்.  ஏன் என்றால்  ஆதி திருவரங்கம் திருமாலின் முதல் அவதாரத்தில் நிர்மாணிக்கப்படுகிறது.  ஆதி திருவரங்கம்  அடுத்து ஸ்ரீரங்கம் என்ற சொல் இங்கு அணைத்து பகுதிகளிலும் பேசப்பட்டு வருகிறது.

அசுரகுல வம்சத்தில் தோன்றி ஆட்சிபுரிந்து வந்த சோமுகன் என்னும் அசுரன்  மிகவும் கடுமையான தவங்களை செய்து பல வரங்களையும் அழியாத ஆயுளையும் பெற்றான்.   அசுர குலத்துக்கே உரிய ஆவணமும், அரக்கத்தனமும் அவனுக்கு இருந்தது.  பூவுலகையும்,  தேவலோகங்களையும் தனது ஆட்சிக்குள் கொண்டு வர வேண்டும்.   முனிவர்களும், தேவர்களும்  தனக்கு சேவை செய்ய வேண்டும் என்று எண்ணினான்.  அவ்வாறே பூவுலகம், தேவலோகம்  எல்லாவற்றையும் வென்று முனிவர்களையும் தேவர்களையும் தனது அடிமைகளாக்கி தனக்கு  சேவை செய்யுமாறு பணித்தான்.
மும்மூர்த்திகளில் பிரம்மாவை சிறைபிடித்து வேத சாஸ்திரங்களை அவரிடமிருந்து கவர்ந்து  சென்று விட்டான்.  பிரம்மாவும், தேவர்களும், முனிவர்களும் திருப்பாற்கடல் சென்று ஸ்ரீமன்  நாராயணனை வணங்கி சோமுகனை வதம் செய்து தங்களை காத்தருளுமாறு வேண்டினார்.   நாராயணனும் சோமுகனை வதம் செய்ய சென்றார்.  இருவருக்கும் மிகப்பெரிய அளவில் போர்  நடந்தது.  சோமுகன் தனது எல்லா மாயாஜாலங்களையும் காட்டி போர் புரிந்து சோர்ந்து விட்டான்.   இனி இருந்தால் நாராயணன் அழித்து விடுவான் என எண்ணி கடலுக்கு அடியில் சென்று பதுங்கி  விட்டான்.
ஸ்ரீமன் நாராயணன் அழியா வரம் பெற்ற சோமுகனை மத்ஸ்ய அவதாரமெடுத்து கடலுக்கு அடியில்  சென்று வதம் செய்து வேத சாஸ்திரங்களை மீட்டு வந்தார்.  மீட்டு வந்த வேத சாஸ்திரங்களை  உத்தரங்கம் எனும் இந்த இடத்தில் மீண்டும் பிரம்மாவுக்கு உபதேசம் செய்தார்.   தேவர்களும்,  முனிவர்களும் மனம் மகிழ்ந்து ஸ்ரீமன் நாராயணனை வணங்கினார்கள்.

கோயில் நடை, காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும் என்பது மகா சிறப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக