சனி, 30 டிசம்பர், 2017

செடிகளாக உருமாறிய இளவரசிகள்

kalaikesari.lk
செடிகளாக உருமாறிய இளவரசிகள்

கோசலை ஆற்றங்கரையை ஒட்டி அமைந்த, பசுமை போர்த்திய அந்த வனத்தில், ஒரு அரச மரத்தின் கீழ் சுவேதவாஜூ என்ற முனிவர் தவத்தில் ஆழ்ந்திருந்தார். அவர் சாஸ்தாவை வேண்டி தியானித்தபடி இருந்தார்.
கோசலை தேசத்தை நந்திவர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு பீமன் (மகாபாரத பீமன் அல்ல) என்ற மகனும், சுகுணா, சுந்தராங்கி என்ற மகள்களும் இருந்தனர்.

ஒரு நாள்.. இளவரசிகள் இருவரும் தங்களது தோழிகளுடன் கோசலை தேசத்தின் நந்தவனத்தைச் சுற்றிப் பார்க்க சென்றார்கள். பின்னர் அங்கே அனைவரும் ஓடிப் பிடித்து விளையாடினர்.
இளவரசிகள் இருவரும் மறைந்து விளையாடியபோது, தங்களையும் அறியாமல் வனத்திற்குள் புகுந்துவிட்டனர். வனத்தின் அழகு அவர்களைக் கவர்ந்ததால், அதை ரசித்தபடியே முனிவர் தவம் செய்து கொண்டிருந்த இடத்திற்கு வந்துவிட்டனர்.

முனிவர் இருக்கும் மரத்தின் மேல் பெரிய தேன் கூடு ஒன்று இருந்தது. அதைப் பார்த்ததும் இளவரசிகளுக்கு, அந்தத் தேனை ருசித்துப் பார்க்கும் ஆசை பிறந்தது. அந்த ஆசை, முனிவர் தவத்தில் இருப்பதையே மறக்கச் செய்து, கல்லைக் கொண்டு தேன்கூட்டை நோக்கி வீசச் செய்தது.

கல் பட்ட தேன் கூட்டில் இருந்த தேனீக்கள் அனைத்தும் நாலாபுறமும் கலைந்து பறந்தன. அதைக்கண்டு இளவரசிகள் இருவரும் பெரிய மரத்தின் பின்புறமாகச் சென்று மறைந்து கொண்டனர்.
தேனீக்களோ மரத்தின் அடியில் இருந்த முனிவரை பதம் பார்த்தன. இதனால் அவரது தவம் கலைந்து போனது. தேன்கூடு கலைக்கப்பட்டிருப்பதைக் கண்ட முனிவர், அதற்கு காரணமானவர்களை தன் ஞான திருஷ்டியால் அறிந்து கொண்டார்.

கோபத்தில், ‘ஏய்.. பதர்களே! நீங்கள் துள்ளிக், குதித்து விளையாட இது என்ன அரண்மனை நந்தவனமா? மாமன்னர் குடும்பத்தில் பிறந்த நீங்கள் இப்படி இழிச்செயலில் ஈடுபட்டு விட்டீர்களே! மறைவில் இருந்து வெளியே வாருங்கள்என்று கத்தினார்.

மரத்தின் பின்னிருந்து வெளிவந்த இளவரசிகள் இருவரும், ‘சுவாமி! அறியாமல் தவறிழைத்து விட்டோம். மன்னித்துவிடுங்கள்என்றனர்.

ஆனால் முனிவரோ, சுகுணாவை பார்த்து, ‘நீ.. நிலத்தில் வளரும் ஜவ்வந்தி தாவரமாக மாறக்கடவதுஎன்றும், சுந்தராங்கியைப் பார்த்து, ‘நீ நீரில் வளரும் செங்கழுநீர் தாவரமாக மாறக்கடவதுஎன்றும் சபித்தார்.

அடுத்த நொடி... இருவரும் தாவரங்களாக மாறினர்.

இந்த நிலையில் தன் மகள்களைக் காணாது, மன்னன் நந்திவர்மன் வனத்திற்கு வந்தார். பின்னர் தவத்தில் இருந்த முனிவரிடம்என் மகள்களைக் கண்டீர்களா?’ என்று கேட்டான்.

முனிவர் நடந்த அனைத்தையும், மன்னனுக்குத் தெரிவித்தார். மகள்களின் நிலையை எண்ணி வருந்திய மன்னன், அவர்களின் சாபம் நீங்க வழி கூறும்படி வேண்டினான்.

அதற்கு முனிவர், ‘மன்னா! என்னால் உன் மகள்களுக்கு சாப விமோசனம் கொடுக்க முடியாது. அனைவரையும் காத்து அருளும் சாஸ்தா தான் சாப விமோசனம் அளிக்கும் ஆற்றல் படைத்தவர். அவரை நோக்கி தவம் இருங்கள்என்றார்.

அதன் பிறகு, முனிவரை வணங்கி விடைபெற்ற நந்திவர்மன் நாடு திரும்பினான். தனது மகன் பீமன் நாட்டை ஆள அவனுக்கு முடிசூட்டு விழா நடத்தினான்.
மகன் மன்னர் பொறுப்பை ஏற்றவுடன், மகள்களின் சாப விமோசனத்திற்காக தன்னுடைய சுக தூக்கத்தை துறந்து கானகத்தை அடைந்தான். காற்றை மட்டும் சுவாசித்து சாஸ்தாவின் அருள்வேண்டி கடும் தவத்தில் ஆழ்ந்தான் நந்திவர்மன்.

நாட்கள் உருண்டோடி வருடங்கள் பல கடந்தன. நந்திவர்மனின் தவத்தில் மெய்மறந்த சாஸ்தா, தனது யானை வாகனத்தில் மன்னன் முன் தோன்றி, ‘பக்தரே! யாம் உமது பக்தியில் மெய் மறந்தோம். நீவிர் வேண்டி கொண்டபடி உமது புத்திரிகள் இருவரது சாபத்தையும் விலக்கி கொண்டோம்.
அவர்கள் சாபம் பெற்ற ஜவ்வந்தி பூக்களையும், செங்கழுநீர் பூக்களையும் எமது பூஜைக்கு ஏற்றுக்கொள்கிறேன். இந்த இரு மலர்களையும் படைத்து என்னை வழிபடுபவர்களுக்கு, யாகங்கள் செய்த பலன்களும், புண்ணியங்களும் கிடைக்கும்என்று அருள் செய்தார்.

சாஸ்தா அருள்பாலித்த மறு நொடியே செடிகளாக உருமாறி இருந்த இளவரசிகள் இருவரும், மீண்டும் சுயஉருவத்தைப் பெற்றனர். மகள்களை மீண்டும் பார்த்த மகிழ்ச்சியில், நந்திவர்மன், சாஸ்தாவை பலவாறாக துதித்து வணங்கினான்.


திங்கள், 25 டிசம்பர், 2017

வைத்தியநாத சுவாமி கோவில் : மடவார் விளாகம்

படிக்காசு அருளிய பரமன்!

வைத்தியநாத சுவாமி கோவில் :

திரு வில்லிப்புத்தூரின் தென்பகுதி மடவார் விளாகம் எனப்படும். இங்கு ஒரு காலத்தில் பெண்கள் மட்டுமே வாழ்ந்ததால் இப்பெயர் பெற்றது. மடவார் விளாகத்தில சிவன் கோவில் இருக்கிறது. இக்கோவிலில் கிருஷ்ணதேவராயர் காலத்துச் சிற்பங்கள் காணப் படுகின்றன. திருமலைநாயக்கரால் இக்கோவில் திருப்பணி செய்யப்பெற்றது. திருமலை நாயக்கரின் மிகப்பெரிய உருவசிலை இக்கோவிலில் உள்ளது.

மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திரையரங்கிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் உள்ளது இத்திருக்கோயில்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் - மடவார் வளாகத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு வைத்தியநாதஸ்வாமி திருக்கோயில். அங்கு எம்பெருமான் சிவன், வைத்தியநாத ஸ்வாமியாகவும் அம்பாள் சிவகாமியாகவும் காட்சியளிக்கிறார்கள்.
முன்னொரு காலத்தில், சிவபக்தையான கர்ப்பிணி ஏழைப் பெண் ஒருத்தி, தன்னை பிரசவத்திற்கு வந்து அழைத்துச் செல்ல தாயை வரச்சொல்லுமாறு, வழிப்போக்கர்களிடம்  தகவல் சொல்லியனுப்பினாள். ஆனால், நிறை மாதம் எட்டியும் அப்பெண்ணின் பிரசவம் பார்க்க தாய் வந்து சேரவில்லை. உடனே தன் கணவரிடம் தகவல் தெரிவித்து விட்டு, அந்த கர்ப்பிணிப் பெண் தன் சொந்த ஊருக்கு தனியாகவே புறப்பட்டாள்.
சிறிது தொலைவில் இருந்த சுயம்பு வன்னி வனநாதர் கோயில் அருகே சென்றபோது, அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே சிவபெருமான் அப்பெண்ணின் தாயின் வடிவில் வந்து, பிரசவம் பார்த்து விட்டு, அப்பெண்ணின் தாகம் தீர்க்க நிலத்தைக் கீறி, மருத்துவ குணம் வாய்ந்த நீரினைத் தந்தாராம். அதனால் சுயம்பு மூர்த்தரான வன்னி வனநாதரின் திருநாமம் - வைத்தியநாதஸ்வாமி என உருமாறியதாம்.
  
படிக்காசு வைத்த ஈஸ்வரன்:
இத்திருக்கோயிலில் பூஜைகள் செய்து வந்த, ஏழை அர்ச்சகரான நம்பியாருக்கு உதவ எண்ணிய வைத்தியநாதர், அவரின் கனவில் தோன்றி, “தினமும் என் கோயில் வாயிற்படியில் உனக்காக பொற்காசுகள் இருக்கும். அதைப் பயன்படுத்தி அனுதினமும் எனக்கு பூஜை செய்எனக் கூறி அருளினார்மறுநாள் கண்விழித்துப் பார்க்கையில் இறைவன் சொன்னதுபோல வாயிற்படியில் பொற்காசு இருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்தார் நம்பியார். இதுபோன்று மொத்தம் 24 திருவிளையாடல்களை இத்தலத்தில் அரங்கேற்றியிருக்கிறார் எம்பெருமான் வைத்தியநாதஸ்வாமி.

இத்திருத்தலத்தில் துர்வாச முனிவர் சாபம் தீர வேண்டியபோது சாபவிமோசனம் தந்தது, அகஸ்தியரின் அகங்காரம் களைய தட்சிணா மூர்த்தியாக அவதாரம் எடுத்து அருள் தந்தது, வழிப்போக்கு முனிவர்கள் இருவருக்கு சிதம்பரம் நடராஜர் போன்று நடனக்கோலத்தில் காட்சி கொடுத்தது, தன்னை நெக்குருகி வேண்டி வீணை வாசிக்கும் சகோதரிகள் இருவருக்கு மன்னரின் கனவில் தோன்றி  பரிசு கொடுக்கச் சொல்லியது என வைத்தியநாதஸ்வாமி எப்போதுமே பக்தர்களின் நாயகனாகத் திகழ்கிறார்.

பண்டைய மதுரையின் மன்னர் திருமலை நாயக்கருக்குகுன்ம நோயினால்பெரும் வயிற்று வலி ஏற்பட்டிருந்தபோது, இத்திருக்கோயிலில் தங்கியிருந்து வைத்தியநாதஸ்வாமியை வேண்டி குணமடைந்திருக்கிறார். அதற்குக் காணிக்கையாக மதுரையிலிருந்து இறைவனை தரிசனம் செய்ய வந்த பல்லக்கினை எம்பெருமானுக்கு தானம் செய்துள்ளார் திருமலை நாயக்கர். இன்றும் வைத்தியநாதர் சந்நிதியில் வைகாசி விசாகத்தின்போது நடைபெறும்பல்லக்கு ஊர்வலத்தில்திருமலை நாயக்கர் வழங்கிய பல்லக்கே பயன்படுத்தப்படுகிறது.

போக்குவரத்து, வாகன, தந்தி, தொலைபேசி இல்லாத அந்தக்காலத்தில் மடவார்வளாக வைத்திய நாத சுவாமி கோயிலில் உச்சி கால பூஜை நிறைவேறியதை தெரிந்து கொள்வதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை செல்லும்

ரோட்டில் ஆங்காங்கே கல் மண்டபங்களை அமைத்து அவற்றில் இருந்து பூஜை நேரத்தில் முரசு முழங்கச்செய்து அந்த ஒலி மதுரையை எட்டியவுடன், மன்னர் வைத்தியநாதரை வணங்கி வழிபாடு செய்த பின் தான் மதிய உணவே சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டார். இதற்கு சான்றாக இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை நெடுஞ்சாலையில் பல கல்மண்டபங்கள் உள்ளதை காணலாம்.























இத்திருத்தலம் கி.பி.ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இத்திருக்கோயிலுக்கு மூவேந்தர்களும், திருமலை நாயக்கரும் திருப்பணி செய்துள்ளனர். திருமலை நாயக்கர் காலத்தில் உருவான மூலிகை ஓவியங்கள் இன்றும் அழியாமல் பல கதைகளைச் சொல்லுகின்றன. இத்திருக்கோயிலில் கொடி மரத்தின் முன்னர் இருக்கும் ஆமைக் கல் 7 அடி உயரத்தில் இருப்பது சிறப்பு. மேலும் இத்திருக்கோயிலில் மூலவர் சந்நிதியின் மேற்கூரையில் வாஸ்துபுருஷரும் 27 நட்சத்திரங்களும் இருப்பது தனிச்சிறப்பு. அதுபோல இறைவி சிவகாமி அம்மன் சந்நிதிக்கு முன்னே உள்ள மேற்கூரையில் ஸ்ரீ சக்கரமும் 12 ராசிகளும் காட்சி தருகின்றன. இத்திருக்கோயிலில் பங்குனி மாதத்தின் முதல் 3 நாட்களிலும், புரட்டாசி வளர்பிறை பிரதோஷத்திலும் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் கருவறையில் விழுவதால், சூரியனே வைத்தியநாதரைப் பூஜிப்பதாக ஐதீகம் நிலவுகிறது.