ஞாயிறு, 17 டிசம்பர், 2017

திருப்பட்டூர் ப்ரம்மபுரீஸ்வரர் தரிசனம்- பேஸ்புக் மீள்



























ப்ரம்மபுரீஸ்வரர் தரிசனம்..
இந்தக் கோவிலை பற்றிய புராணம் வழக்கம் போல பல மாறுபட்ட கோணங்களில் இருக்கிறது. தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், சைவம் ஒரு புராணம் சொல்லும் போது.. இடையில் வைஷணவம் தங்கள் பெருமை போய்விடக்கூடாது என அதில் பெருமாளையும் சேர்த்து ஒரு புராணம் சொல்கிறார்கள். கோவிலில் இது பற்றி பேசும் போது, இடைப்பட்ட புராணங்களை பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை என்பதே பதில். நமக்கு ஹரியும் சிவனும் ஒன்று என்று கற்றுக் கொடுத்து விட்டு நம் பெரியவர்கள்.. ஹரி பெரிதா? சிவம் பெரிதா என சண்டை போட்டுக் கொண்டு இருந்தார்கள் அல்லது இருக்கிறார்கள்.. என்றே எனக்கு தோன்றுகிறது. இது தெளிந்து வரும் வரை நமது வாரிசுகளை அந்தப்பக்கம் விடாமல் இருப்பதே நல்லது.
நிற்க, வாருங்கள் தரிசனத்துக்கு போவோம்....

திருச்சியிலிருந்து சென்னை வரும் சாலையில், சமயபுரம் கடந்து சிறுகானூர் எனும் சிற்றூர். அங்கிருந்து இடது புறம் திரும்பி 5 கி மி சென்றால் திருப்பட்டூர். வழிக்காட்டி போர்டுகள் மிக தெளிவாக உள்ளன. எந்த சிரமமும் இல்லாமல் கோவில் இருக்கும் ஊருக்கு போய்விடலாம். அதுவே இன்றைக்கு புதிய விஷயம். மிக சிறிய கிராமம். நன்றாக மழை பெய்தால் மிக செழிப்பாக.. பச்சை பசேல் என கண்ணை கவரும் வண்ணம் அந்த கிராமம் இருக்கும். அப்படியே நான் 30/40 வருடங்களுக்கு முன் பார்த்த என் கிராமத்தை நினைவூட்டுகிறது.
சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து அவ்வப்போது சில பஸ்கள் உண்டு. ஆனால்.. டாக்ஸியில் போனால் குறிப்பிட்ட நேரம் சென்று வரலாம்.
காலை 6 மணிக்கு கோவில் திறந்தாலும், 8 மணிக்குதான் பிரம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் ஆரம்பித்து 9 மணி அளவில் நடை திறக்கிறார்கள். ஆக, 9 மணி அளவில் அங்கே இருப்பது நல்லது. பிரம்மன் முழுமையாக மஞ்சளில் அலங்காரம். அதுவே விஷேசம்..
குரு பரிகார தலம்: அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் பிரம்மா இங்கு இருக்கிறார். குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது.
குருர் பிரஹ்மா; குருர் விஷ்ணு;குருர் தேவோ மகேச்வர; குரு ஸாட்ஷாத் பர ப்ரஹ்மை தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ'' என்ற குருமந்திரப்படி அமைந்த கோயில் இது. கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம்.
இந்த அமைப்பு மிக விசேஷமானது.
முருகப்பெருமான், அசுரர்களை அழிக்கச் செல்லும்முன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி, அதன்பின் படை திரட்டிச் சென்றாராம். இதனால் "திருப்படையூர்' எனப்பட்ட தலம் "திருப்பட்டூர்' என மருவியதாகச் சொல்வர். முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கிருக்கிறார்

பிரம்மா மங்கலம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால், பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை படைத்து, மஞ்சள் பிரசாதம் தருகின்றனர்.
மற்ற சன்னதிகளிலும் மங்கல சின்னமாகிய மஞ்சள் நிற வஸ்திரங்களையே பயன்படுத்துகின்றனர். பிரம்மன் வழிபட்ட பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர்,பாதாள ஈஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர்,அருணாசலேஸ்வரர், கைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தீஸ்வரர்,சப்தரிஷீஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள், சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர். பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார். குருவுக்கு அதிதேவதை பிரம்மா. எனவே, வியாழன் இங்கு விசேஷம்.
யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம். அதுபோல், தலையெழுத்து மாற தகுதியுள்ளவர்கள், குறைந்த பாவக் கணக்கில் இருப்பவர்கள், பக்திமான்களின் தலைவிதி மாற்றப்பட்டு விடுகிறது. உதாரணமாக நோய் தாக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அது மாறிப் போகிறது.
ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற விதியுள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும். விரயச் செலவுகள் தடுக்கப்படும். பெயிலாகிக் கொண்டிருக்கும் மாணவன் நன்றாக படிக்க ஆரம்பித்து உயர்நிலைக்குச் செல்வான். நியாயமற்ற கோரிக்கைகளை பிரம்மன் கவனிப்பதில்லை என்பதுடன், மேலும் நமது நிலையை மோசமாக்கி விடுவார்.
பதஞ்சலி மகரிஷி ராமேஸ்வரம் உட்பட 10 தலங்களில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில் இத்தலமும் ஒன்று. இவர் ஐக்கியமான இடத்தில் ஒரு லிங்கமும், ஓவியமும் உள்ளது. அமாவாசையன்று இந்த லிங்கத்திற்கு, தயிர் சாதம் படைத்து பூஜை நடக்கும். வைகாசி சதயத்தன்று இவரது குருபூஜை நடக்கிறது. சித்தர்பாடலில் இத்தலம் "பதஞ்சலி பிடவூர்' எனக் கூறப்பட்டுள்ளது.
மனஅமைதி கிடைக்க, எலும்பு தொடர்பான நோய் நீங்க, கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, குருவருள் கிடைக்க திங்கள், வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகின்றனர்.
பதஞ்சலியின் ஜீவசமாதி: ஜோதிடக்கலையின் தந்தையும், பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவர் பத்து இடங்களில் ஜீவசமாதி அடைந்ததாக ஒரு தகவல் உண்டு. அதில் இத்தலமும் ஒன்று. பதஞ்சலி முனிவரின் சமாதி இக்கோயிலுக்குள் இருக்கிறது. அவர் யோகசூத்ரம் என்ற நூலை எழுதியவர்.
பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களும் இங்கு உள்ளன. எனவே ஜோதிர்லிங்கங்களை தரிசித்த பலன் இங்கு சென்றாலே கிடைத்து விடுகிறது. தெற்கு நோக்கி இருக்க வேண்டிய காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார்.
பிரம்மனுக்கு 36 தீபம் (27 நட்சத்திரம், 9 கிரகம்) ஏற்றி, 108 புளியோதரை உருண்டைகளை படைத்து வழிபடுவது சிறந்தது. ஒன்பது முறை பிரம்மனை வலம் வர வேண்டும்.
தல வரலாறு: பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார். படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார்.
அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், ""ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்,'' எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார். படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா,இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார்.
பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார். மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார்.
என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக,'' என வரமும் கொடுத்தார். அன்று முதல் இந்த பிரம்மன், தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அருள் செய்கிறார். பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது.
அம்மா வின் நல்லாசி என்று சொல்லியே நல்லா அடிச்சிருக்காங்கன்னு தெரியுது. கிறானைட்ன்னு சொல்லி மட்டமானா கிறானைட் அல்லது உசத்தி பாறாங்கள் போட்டிருக்கானுங்க.... இப்படி ஏமாற்றினா.. இப்படிதான் அம்போன்னு சாவு வரும்..சரி சரி புனித யாத்திரையில் எதுக்கு இந்த வார்த்தைகள். நன்றி வணக்கம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக