செவ்வாய், 12 நவம்பர், 2019

கனிபாக்கம் விநாயகர் கோவில்












#கனிபாக்கம்_விநாயகர்_கோவில்..
ஆந்திரா, சித்தூரிலிருந்து சுமார் 18கிமீ மேற்கே உள்ளது. சுமாரான சாலை வசதி. கனிப்பாக்கம் தாண்டி வேறே ஊர் இல்லை. அத்தோடு சாலை முடிந்து விடுகிறது.
வெயிற்காலம் மகா கொடுமையாக இருக்கும்.

ஒரு பெரிய வளைவு கனிபாக்கம் விநாயகர் உங்களை வரவேற்கிறது என்று தெலுங்கில் ஒரு போர்டு. உள்ளே போக போக.. நூற்றுக்கணக்கில் ஏசி வசதியுடன் கோயில் நிர்வாகத்தின் தங்குமிடங்கள். லோக்கல் பஸ் ஸ்டான்ட், ஏராளமான தனியார் ஹோட்டல்கள்.
கோயில் கோபுரம் ஓங்கி நின்று கொண்டு இருந்தது. கோயிலை சுற்றி அரை கிமீக்கு வளைத்து அங்கு வாகனங்கள் செலலாமல் இருக்க தடுப்பு வேலிகள். பார்க்கிங் விசாலாமான இடம். பல மாநில வண்டிகள்.
திருப்பதி போவோர் பெரும்பாலோர் அப்படியே இங்கு வந்து போகின்றனர். நிறைய மொட்டைகள். விஷேச நாட்களில் நல்ல கூட்டம் இருக்கக் கூடும்.

வெளியே கோயிலின் லாக்கர் அலுவலகத்தில் கேமரா / மொபைல் ஃபோன் கண்டிப்பாய் வைத்து தான் செல்ல வேண்டும்.

இலவச தரிசனம் அடுத்து கட்டண தரிசனம் 10 ரூ.. "சீக்கிர தரிசனம்" 51ரூ... "அதி சீக்கிர தரிசனம்" 101ரூ.. "நிஜரூப தரிசனம்" 50ரூ... என்னவென்று புரியவில்லை. அப்போ நாம் தரிசனம் செய்தது? நிஜமில்லையோ?

எல்லா தரிசனமும் ஒரு லெவலில் ஒன்றாய் கலந்து வழக்கமான ஜருகண்டி ஜருகண்டிதான்...

வெளியில் நிறைய கோவில் அய்யர்கள். அவர்களிடம் கொடுக்க வேண்டியதை கொடுத்தால் நேரே கருவறைதான். அதே போல போலிஸ். அவர்களும் ஜருகண்டியுடன் நாலு பேரை அழைத்து வந்து கியூ பைபாஸ்...
வழக்கமான கோவில் அட்ராஸிட்டியுடன்..

கோயிலுக்கு நுழைந்தால் ஆகம விதிப்படி!!!! குளிர் சாதன வசதியுடன் மிக அமைதியாக வீற்றிருந்தார் கனிபாக்க விநாயகர்.

11ஆம் நூற்றான்டின் சோழ வம்சமான குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு பின்பு 1336 விஜய நகர மன்னர்களால் பெரிதுபடுத்தபட்ட கோயில்.

இப்போது கனிப்பாக்கமாக இருக்கும் இந்த ஊருக்கு உண்மையான் பெயர் தமிழ் பெயர் "கனிப்பார்கம்" என்பதாகும். இங்கு வசித்து வந்த மூன்று சகோதரர்கள். ஒருவர் பார்வை இழந்தவர், இன்னொருவர் காது கேட்காதவர், மற்றவர் வாய் பேச முடியாதவர். விவசாயம் செய்து வந்தனர். இவர்கள் நிலத்துக்கு தேவையான தண்ணீரை ஏற்றம் இறைத்து தண்ணீர் பாய்ச்சினர். ஒரு கட்டத்தில் தன் கிணற்று தண்ணீர் வற்றி போனதால் அங்கு உள்ள ஒரு இடத்தில் இரும்பு கடப்பாரையை கொண்டு தரையை தோண்டுகையில் அந்த கடப்பாரை ஒரு கல்லில் மோதி அங்கு ரத்தம் வடிய துவங்கியவுடன் அங்கு உதித்தார் கனிபாக்க விநாயகர்.

1945ஆம் ஆண்டு இந்த கோயிலுக்கு ஸ்ரீமதி லக்ஷ்மனம்மா என்னும் பக்தை இந்த கோயிலுக்கு வெள்ளிக்கவசம் வழங்கினார். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் அந்த கவசம் 2 அடி உயரம் இன்று கனிப்பாக்க விநாயகர் சுமார் 4 அடிக்கும் மேல் வருடா வருடம் இந்த விநாயகர் வளர்ந்து வருகிறார் எங்கிறார்கள். நம்பினாதான் சோறு என்பது தான் அதிசயம். கோயில் உட்பிரகாரத்தில் இந்த விநாயகருக்கும் இது வரை சாற்றிய அத்தனை பழைய காப்புகளையும் வைத்திருக்கின்றனர் எங்கின்றனர். நாம் பார்க்க முடியாது.

இந்த சுயம்பு, தரையில் இருந்து ஒரே கல்லாகவே இருக்கிறது. செய்து வைத்த சிலை அல்ல. அது போக இது வரை வயிறு பகுதி வரை தான் வெளி வந்துள்ளது. இன்னும் முழுவதுமாக வர வில்லை. ஆனால் வருடா வருடம் 2 இன்ச்சில் இருந்து இப்போது 4 அடிக்கும் மேல் வளர்ந்து வருகிறது என்றனர்.
மிகவும் சக்தி வாய்ந்த கோயில் என்பதை அங்கு அலை மோதும் கூட்டம். அத்தனை திருமண மண்டபங்கள். அத்தனை தங்கும் விடுதிகளை வைத்து சொல்லி விடலாம். ஆந்திரா என்றாலும் தமிழில் தான் அனேக பேர் அங்கு பேசுகின்றனர். பல கோர்ட் தீர்க்க முடியாததை இங்கு வந்து தீர்த்ததாக கூறுகின்றனர்.

அருகில், சிவன் கோவில். வாசலில் பார்க் போல சிவன், வினாயகர், விஷ்ணு என கலர் கலராக சிலைகள். எதிரேயே ஒரு பழைய பெருமாள் கோவில். சீண்டுவாரில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக