சனி, 9 நவம்பர், 2019

அர்த்தகிரி_என்னும்_அரகொண்டா_ஆஞ்சனேயர்







#அர்த்தகிரி_என்னும்_அரகொண்டா_ஆஞ்சனேயர்

நாங்கள் கோவிலுக்கு செல்லும் போது மணி காலை 11.30. முன்னதாகவே வழியில் ஒருத்தர் கோவில் மூடியாச்சி என்றார்.

அடக் கடவுளே, இதென்ன சோதனை? உன்னைப் பார்க்க ஓடோடி வந்த எங்களை ஏமாற்றி விடுவாயா ஆஞ்சனேயா என மனமார வேண்ட...

கோவிலினுள் இருந்த டிக்கட் கொடுப்பவர்,
"அஞ்சேல்... காசேதான் கடவுள். ஆளுக்கு நூறு ரூ டிக்கட் வாங்கினால் கடவுளும் மூடிய கதவை திறப்பார்" என்றார்.

டிக்கட் வாங்கி உள்ளே போனால், ஸ்க்ரீனை திறந்தவுடன் அதற்கென்றே இரண்டு அவாள் பூஜைக்கு தயாராக இருந்தனர். பின் பக்கமாக ஒரு வாசல் இருக்கும் போல!!!
அப்புறம் என்ன, தலைக்கு இருபது ரூ தட்சனையுடன் திவ்ய ஆஞ்சனேய தரிசனம்தான்.

கோவிலில் எல்லோருமே தெலுங்கில்தான் பேசுகின்றனர். டிக்கட்டுக்கு பணம் கொடுத்தவுடன் மிகத் தெளிவான தமிழ் பேசப்படுகிறது...!!!

மெயின் ரோட்டிலிருந்து மலைக் கோவிலுக்கு போக சாலை வசதி உள்ளது. 5 நிமிட பயணம். அருகில் வேறே எந்த கடையும் இல்லை.

ஸ்தல வரலாறு:
பிரபலமான  அப்பல்லோ மருத்துவமனைக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன நேரடி தொடர்பு இருக்க முடியும்? அப்படி ஒரு தொடர்பு இருக்கிறது என்கிறது தமிழக எல்லையில் சித்தூர் மாவட்டத்தில்   உள்ள அரகோண்டாவில் அமைந்துள்ளது அர்த்தகிரி ஆஞ்சநேயர் திருக்கோயில்.

திருக்கோயிலின் ஸ்தல வரலாறு

 திரேதாயுகத்தின்போது ஸ்ரீராமருக்கும் ராவணனுக்கும் போர் நடந்தது. போர் தீவிரம் அடைந்த வேளையில் ராவணனின் மகன் இந்திரஜித் லட்சுமணன் மீது பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்தான். பிரம்மாஸ்திரத்தின் வலிமையால் மூர்ச்சையாகிக் கீழே விழுந்த இளவல் லட்சுமணனைக் காப்பாற்றும் வழி தெரியாமல் அனைவரும் தவித்தனர். அப்போது அருகே இருந்த ஜாம்பவான் இமய மலைச் சாரலில் உள்ள சஞ்சீவி மலையைக் குறித்தும் அதன் தன்மை குறித்தும் ஆஞ்சநேயரிடம் தெரிவித்தார். அந்த சஞ்சீவி மலையில் உள்ள மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள் பற்றி விவரித்த ஜாம்பவான்,ஆஞ்சநேயரிடம் உடனே மூலிகையைக் கொண்டு வருமாறு தெரிவித்தார்.

இதையடுத்து ஆஞ்சநேயர்  சஞ்சீவி மலை நோக்கித் தாவிச் சென்றார் . ஆனால், அவரால் சஞ்சீவி பர்வதத்தில் உள்ள மூலிகையை  கண்டறிய முடியவில்லை லட்சுமணனின் உயிரைக் காக்கும் பொருட்டு,அந்தப் பர்வதத்தையே பெயர்த்தெடுத்து போர்க்களமான இலங்கை நோக்கி வானவீதியில் சஞ்சாரம் செய்தார். அவ்வாறு அவர் வந்தபோது அந்த மலையின் ஒரு பகுதி இந்த மலையில் விழுந்தது. இதனாலேயே இந்தப் பகுதிக்கு அரகோண்டா என்று பெயர் வந்தது. ‘அர’ என்றால் துண்டு ‘கோண்டா’ என்றால் மலை அரகோண்டா என்றால் மலையின் ஒரு பாகம் என்று பொருள்.

 சஞ்சீவி மலையின் ஒரு பகுதியான  இந்த அரகோண்டாவுக்கு  அருகில் உள்ளது இந்தத் திருக்கோயில். இந்தக் கோயிலில் ஒரு தடாகத்தை நாம் பார்க்கலாம். இந்தத் தடாகத்தில் சஞ்சீவி பர்வதத்தின் ஒரு பகுதி கீழே விழுந்ததால், இந்தத் தடாகம் முழுவதும் மூலிகை நிரம்பியுள்ளது என்றும் இந்தத் தடாக நீர் நோய்களைத் தீர்க்கும் அருமருந்து என்றும் கூறுகிறார்கள். எனவே பக்தர்கள் தங்கள் தீராத நோய் தீர்க்கும் தீர்த்தமாக இந்தத் தடாக தீர்த்தம் பருக பெருமளவில் வருகிறார்கள்.

அப்பல்லோ மருத்துவமனையின் ஆன்மிகத் தொடர்பு.

அப்பல்லோ குழும மருத்துவமனைகளில் முதல் மருத்துவமனை இங்கிருந்து தான் ஆரம்பமானது . இந்த திருக்கோயிலில்  இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள அப்பலோ மருத்துவமனைக்கு , கோயிலின் தடாக நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தத் திருக்கோயிலில் ஆஞ்சநேயரைத் தரிசித்து தடாக தீர்த்தத்தை பிரசாதமாக ஏற்றுச் சென்றாலே போதும் தீராத நோயும் தீரும் என்பது பலன் அடைந்தவர்கள் சொல்லும் பலமான நம்பிக்கை.

 சித்தூரில் இருந்து புங்கனூர் செல்லும் வழியில் சுயம்பு விநாயகர் எழுந்தருளியுள்ள கணிப்பாக்கத்தில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் . தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்கள் சிலர் சித்தூர் சென்று அங்கிருந்து அர்த்தகிரிக்குச் செல்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக